திருவனந்தபுரம்: 2019ம் ஆண்டுக்கான மாநில கணக்கு தணிக்கை அறிக்கையை கேரள சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தாக்கல் செய்தார். அதில், கேரள டிஜிபி மற்றும் காவல்துறை குறித்த திடுக்கிடும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: ேகரளாவில் பல்வேறு ஆயுதப்படை முகாம்கள் மற்றும் திருச்சூர் போலீஸ் அகாடமியில் இருந்த 12,601 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் திருவனந்தபுரம் ஆயுதப்படை முகாமில் இருந்து 25 கைத் துப்பாக்கிகள் மாயமாகியுள்ளன. துப்பாக்கி தோட்டக்களுக்கு பதிலாக போலி தோட்டாக்கள் வைத்து கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகள் மாயமானது குறித்து விசாரணை நடந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு துப்பாக்கி தோட்டாக்கள் மாயமானது பாதுகாப்பை பாதிக்கும் பிரச்னையாகும்.