திருவனந்தபுரம்: ‘உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய போதிலும் சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்த முடியாது,’ என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி, புட்டபர்த்தி, குருவாயூர் உள்பட முக்கிய கோயில்களில் இருப்பது போல், சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க தனி சட்டத்துடன் கூடிய ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த நவம்பரில் கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள சட்டசபையில் இது குறித்த கேள்விக்கு தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ளது. சபரிமலை கோயில் தவிர, 1,250 கோயில்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ளது.