கடலூர்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அருகே உள்ள வெள்ளை பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி (38), மாற்றுத்திறனாளி. மூன்று சக்கர சைக்கிளில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது திடீரென பாட்டிலில் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றினார். பின்னர் தீக்குச்சியை உரசி உடலில் நெருப்பை பற்ற வைக்க முயன்றார். இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாய்ந்து சென்று தரணி இடம் இருந்த தீக்குச்சி, மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.