சமுதாய உணவுக் கூடங்கள் அமைப்பது தொடர்பான வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிப்பு

டெல்லி : நாடு முழுவதும் சமுதாய உணவு கூடங்கள் அமைப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இதுவரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்கள், அடுத்த 24 மணி நேரத்தில் ரூ.1 லட்சம் அபராதத் தொகையுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன் பிறகும்  பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ரூ. 5  லட்ச அபராதத் தொகையுடன் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதில் பஞ்சாப், நாகலாந்து, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களும் அந்தமான் - நிக்கோபார், ஜம்மு - காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இதுவரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பட்டினிச் சாவுகளைத் தடுப்பதற்கு சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அனுன் தவான், இஷான் சிங், கஞ்சனா சிங் ஆகிய சமூக ஆர்வலர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனுவுக்கு ஆதரவாக கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதற்கு பதிலளிக்குமாறு மத்திய, மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: