'நகராட்சி , மாநகராட்சி தேர்தல் நடத்தாதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' : தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

சென்னை: மாநகராட்சி, நகராட்சிக்கும் சேர்த்து தேர்தலை நடத்தாமல் உத்தரவை மீறி செயல்பட்ட தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 7ம் தேதி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை பஞ்சாயத்து, மாநகராட்சி, மற்றும் நகராட்சி என அனைத்திற்கும் மொத்தமாகதான் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய முந்தைய உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தை பொறுத்தமட்டில் கிராமப்புற ஊரக தேர்தலை மட்டும் நடத்திவிட்டு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு நடத்தாமல் விட்டுவிட்டது. மேலும் அதுகுறித்த அறிவிப்பணையைக் கூட இன்னும் வெளியிடவில்லை. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். அதனால் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது.

மனு தள்ளுபடி

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது  தலைமை நீதிபதி, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் மற்றும் அரசும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு என்பது எதுவும் கிடையாது. அதற்கான முகாந்திரமும் மனுவில் கிடையாதுஎன தெரிவித்த நிலையில், அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: