வருமான வரித்துறையின் விசாரணைக்கு நடிகர் விஜய் இன்று ஆஜராகவில்லை: மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டதாக தகவல்

நெய்வேலி: வருமான வரித்துறையின் விசாரணைக்கு நடிகர் விஜய் இன்று ஆஜராகவில்லை, நெய்வேலி என்எல்சியில் நடைபெறும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றுள்ளார். வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்றே ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கறிஞர் மூலம் கால அவகாசம் கேட்க விஜய் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி.யில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை, வருமான வரித்துறையினர் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் விஜய் வீட்டிலும் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது.

ஆனால் அவர் வீட்டிலிருந்து ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிடவில்லை. பின்னர் வருமான வரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில், ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய் மீண்டும் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகர் விஜய்,  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில்  நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஆனால் தற்போது என்எல்சியில் நடைபெறும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றுள்ளதால் விசாரணைக்கு ஒத்துழைக்க கால அவகாசம் கேட்க விஜய் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: