மன்னார்குடி: திருவாரூர் அருகே எண்ணெய் குழாய் வெடித்து வயலில் பரவியதால் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து பயிர் சேதமானது.திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி சார்பில் 100 இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதற்காக விளைநிலங்களில் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கச்சாஎண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. கூத்தாநல்லூர் அருகே பாரதி மூலங்குடி கிராமத்திலும் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு சுமார் 5 கிமீ தொலைவில் வெள்ளக்குடி கிராமத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. பாரதி மூலங்குடியை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் (48) என்பவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் சம்பாநெல் சாகுபடி செய்திருந்தார். கடந்த மாதம் அறுவடை முடிந்த நிலையில், அந்த வயலில் 10 நாட்களுக்கு முன் உளுந்து விதை தெளித்திருந்தார். உளுந்து செடிகள் தற்போது வளர துவங்கி இருந்தது. பன்னீர்செல்வம் நிலத்தில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குழாயில் நேற்று அதிகாலை திடீர் வெடிப்பு ஏற்பட்டு கச்சாஎண்ணெய் கசிந்து ஒரு ஏக்கர் நிலம் முழுவதும் பரவியது.