7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம்; தமிழக அரசின் கோரிக்கை 2018-ம் ஆண்டே நிராகரிப்பு - மத்திய அரசு

சென்னை: ராஜுவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவு எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பேரறிவாளன் மனு மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த 7 பேரையும் விடுவிக்கும் படி தமிழக அமைச்சரவை 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்தை தமிழக அரசு ஆளுநருக்கும் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரை மீது தமிழக ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இன்று இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நசீம்கான் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்து 2018-ம் ஆண்டே நாங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பேரறிவாளன் ஆளுநரிடம் கருணை மனு நிலுவையில் உள்ள காரணத்தால் அதில் சட்டப்படி முடிவெடுக்க ஆளுநருக்கே அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 பேர் விடுதலை என்பது மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்ததால் பேரறிவாளன் கருணை மனு மீது சுதந்திரமாகவும், சட்டப்படியும் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு தன்னுடைய பதில் மனுவில் குறிப்பிபட்டிருக்கிறது. மேலும் நளினி வழக்கு என்பது விசாரணைக்கு உகந்தது அல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிப்ரவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: