திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நேற்று கோலாகல கொண்டாட்டத்துடன் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப்பெருமானின் முதல்படை வீடு என்ற பெருமைக்குரிய மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா கடந்த ஜன.26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் மயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், புஷ்ப வாகனம், ரிஷப வாகனம், ரத்தின சிம்மாசனம், பச்சை குதிரை உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.