1,000 ஆண்டுகளை கடந்து தமிழர்களின் கட்டிடக்கலையை உலகெங்கும் பறைச்சாற்றும் தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகள்

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலை கி.பி.1010ம் ஆண்டில் மன்னன் ராஜராஜசோழன் கட்டி முடித்து குடமுழுக்கு செய்தார். அதன்பிறகு தஞ்சையை ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்களும் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு செய்தனர். கடைசியாக கடந்த 1997ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் 23 வருடங்களுக்கு பிறகு தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற பெரிய கோயில்

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்று தான் தஞ்சை பெரிய கோயில். பெரியகோயில் 1,000 ஆண்டுகளை கடந்து தமிழர்களின் கட்டிடக்கலையை உலகெங்கும் பறைச்சாற்றி கொண்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.

நந்தி மண்டபம்

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.

கல்வெட்டுகள்

பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கோயிலை கட்ட யார் யார் பணியாற்றினார்களோ, கட்டடக்கலை நிபுணர்களிலிருந்து அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோயில் பணி செய்ய உதவியவர்களுக்கு உதவியவர்களின் பெயர் கூட கல்வெட்டில் பதிவு செய்திருப்பது ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையும், மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், ராஜ ராஜ சோழன் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் புலப்படுகிறது.

தமிழின் சிறப்புகள்

பெரிய கோயிலில் தமிழின் சிறப்புகளும் மாமன்னர் இராஜ ராஜ சோழனின் தமிழ் பற்றும் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும்.

உலகிலேயே பெரிய சிவலிங்கம்

கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

கோபுர அதிசயம்

இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் மதிய வேளைகளில் இந்த கோவிலில் உள்ள கோபுரத்தின் நிழல் கீழே விழுவதில்லை என்பதாகும். அதே போல் கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதை விட அதிசயமாக அதை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என வியக்க வைப்பதாக உள்ளது.

கிரானைட் கற்கள்

கோயிலின் கட்டுமானப் பணிக்காக 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோயிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

Related Stories: