கடலூர்: சிதம்பரம் நகராட்சி ஆணையரை மாற்ற வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் தொடர்ந்து தொழில் வரி, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி உள்ளிட்டவைகளை கட்டாமல் இருந்ததால் ரூபாய் 13 கோடிக்கு மேல் வரி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகத்தை, நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிதம்பரம் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது மற்றும் மின்கட்டணம் செலவு உள்ளிட்ட இதர செலவுகளுக்கு கோடிக்கணக்கான தொகை நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கட்டக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் வசூலிக்க பல்வேறு குழுக்களை நியமித்துள்ளார். அதனடிப்படையில், வரி வசூலிப்பு குழுவினர், சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் மற்றும் வீடுகளில் வரி பாக்கியை செலுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வந்தது.