ஆவடி: கொளத்தூர் பாலாஜி நகர், 6வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (45). இவர், அம்பத்தூரை சேர்ந்த சைமன் என்பவர் நடத்தி வரும் பணம் இரட்டிப்பு தொழிலில் ஏஜென்டாக பணியாற்றி வருகிறார். சரவணனுடன் மாங்காடு, ஜோதி நகரை சார்ந்த ராஜேஷ் (21), நந்தனம், லோட்டஸ் காலனியை சேர்ந்த வெங்கடேஷ் (23) ஆகியோரும் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். சரவணன், நண்பர்களும் பணம் இரட்டிப்பு தொழிலுக்கு ஆள் சேர்த்து விட்டால் கமிஷன் வழங்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக பணம் கட்டியவர்களுக்கு இரட்டிப்பு வழங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பணம் கட்டியவர்கள் சரவணன் மற்றும் நண்பர்கள் மீது ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 31ம் தேதி தொழில் விஷயமாக பேச வேண்டும் என கூறி ராஜேஷ், வெங்கடேஷ் இருவரும் சரவணனுக்கு போன் செய்து ஆவடி அருகே கோயில்பதாகை, பூம்பொழில் நகர் பகுதிக்கு அழைத்துள்ளனர். சரவணன் தனது காரில் அங்கு வந்தபோது ராஜேஷ், வெங்கடேஷுடன் அடையாளம் தெரியாத 4 பேர் நின்று கொண்டிருந்தனர். பின்னர், 4 பேரும் சேர்ந்து சரவணனை காரில் கடத்தி சென்றனர். பின்னர் ராயபுரம் அழைத்து சென்று தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கி தருமாறு சரவணனை மிரட்டியுள்ளனர். இதற்கிடையே சரவணன் கடத்தப்பட்டது தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் உறவினர்கள் தகவல் கொடுத்தனர்.