திருவொற்றியூர்: எண்ணூரில் குழாய் பதிக்க சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் சீரமைக்காததால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொடுங்கையூர் வழுதலைமேடு பகுதியில் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குழாய் மூலம் மணலி, எர்ணாவூர் வழியாக காட்டுப்பள்ளி வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எண்ணூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையில் குழாய் பதிக்க சில தினங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர், பணிகள் முடிந்த இடத்தில் சாலை போடுவதற்காக ஜல்லி கற்கள் கொட்டி நிரவப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் இதுவரை சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் மீது மாணவ, மாணவியர், பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி ஜல்லி குவியலில் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர்.