நாகர்கோவில்: எஸ்.எஸ்.ஐ. கொலையில் கைதான தீவிரவாதிகள் 2 பேரும், போலீஸ் காவல் விசாரணை முடிந்து நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கத்தி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வில்சனை (57) சுட்டு கொன்ற வழக்கில் கைதாகி உள்ள அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் கடந்த 21ம் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்து, டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். 10 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்ததை தொடர்ந்து இருவரும் நேற்று மாலை 3.30 மணியளவில் நாகர்கோவில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.