மத்திகிரி அருகே டூவீலர் மீது லாரி மோதி கணவன், மனைவி பலி: கிரக பிரவேச நிகழ்ச்சிக்கு வந்த போது சோகம்

ஓசூர்: மத்திகிரி அருகே டூவீலர் மீது லாரி மோதியதில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு வந்த போது நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் பெங்களூரு இ.ஜி.புரா முனீஸ்வரா லேஅவுட் 26வது கிராசில் வசித்து வருபவர் முனிகிருஷ்ணா (45). மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சந்தோஷா (40). கணவன், மனைவி 2 பேரும் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே டி.கொத்தப்பள்ளியில் உறவினர் இல்ல கிரக பிரவேச நிகழ்ச்சிக்கு பெங்களூரில் இருந்து டூவீலரில் புறப்பட்டனர்.  

நேற்று காலை 11 மணி அளவில் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே செவன்த்டே பள்ளி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி முனிகிருஷ்ணா ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. இதில் கணவன், மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சந்தோஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் போராடிக்கொண்டிருந்த முனிகிருஷ்ணாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் விரைந்து வந்து சந்தோஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: