திருமண விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை..: மாமியார் வீட்டுக்கே சென்று கைது செய்த போலீசார்!

சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நண்பனின் திருமணத்தன்று பட்டாக்கத்தியில் சகநண்பர்கள் கேக் வெட்டிக் கொண்டாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் ரூட் தல மாணவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, மணமக்கள் நின்ற மேடையில் ஏறிய மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர், மணவிழாவை கொண்டாடும் 4 வகையில் அடி உயர பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். அதுமட்டுமின்றி மற்றொரு மாணவன் பட்டாக்கத்தியோடு நடமனமாடும் வீடியோவும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் வீடியோவை கொண்டு விசாரணை நடத்திய திருவேற்காடு போலீசார் புதுமாப்பிள்ளை புவனேஷை கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள மாமியார் வீட்டுக்கு விருந்துக்காக சென்றிருந்த நிலையில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ரவுடி பினு ஸ்டைலில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய சட்டக் கல்லூரி மாணவரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மாங்காடு அருகே பிரபல ரவுடி பினு தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் வாளால் கேக் வெட்டி கொண்டாடினான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ரவுடி பினு மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: