மும்பை: சீனாவில் இருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. முதலில் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. வூஹான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. அந்நாட்டுக்கு பயணம் செய்வது பற்றி இந்தியா முன்பே எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வூஹான் நகரில் மருத்துவம் மற்றும் பிற படிப்புகளை படித்து வரும் 700 இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் விடுமுறையை முன்னிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.