ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்: வைகோ அறிக்கை

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். காவிரிப் படுகையை இரண்டு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்திருக்கிறது. பிரிவு 1ல், விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. பிரிவு 2ல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை கைவிட கோரியும்  விவசாயிகள், பொதுமக்கள் சாகும்வரை போராட்டம், வயல்களில் இறங்கி போராட்டம், மனித சங்கிலி போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோருவதிலிருந்து  கடற்பகுதியில் துளையிடுதலை மேற்கொள்ள விரும்பும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் மதிமுக பொதுச்சையலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தின் உயிர் ஆதரமான காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக்கி 56 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்க பா.ஜ.க அரசு முயற்சி செய்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

காவிரிப் பாசன மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயற்படுத்த முனைவதும், அதற்காக மக்கள் கருத்தைக் கேட்க மாட்டோம் என்று எதேச்சதிகாரமாக பாஜக அரசு அறிவித்துள்ளதும் கடுமையான கண்டனத்திற்கு உரியது. தமிழக மக்கள் ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதை ஒரு காலமும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்பதை மத்திய பாஜக அரசும், தமிழக அரசும் உணர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: