10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்

குடகு: பிரபல நடிகை ரஷ்மிகா மந்தண்ணா வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், குடகு  மாவட்டம், விராஜ்பேட்டையில் வசித்து வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தண்ணா. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் இவர், கடந்த 2016ம் ஆண்டு முதன் முதலாவதாக ‘‘கிரிக் பார்ட்டி’’ என்ற கன்னட திரைப்படத்தின்  மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். தெலுங்கில் புகழ் பெற்ற நடிகரான மகேஷ் பாபு, நாகார்ஜுனா, நானி, அல்லு அர்ஜுன், தமிழில் விஜய் சேதுபதி, கன்னடத்தில் புனித்ராஜ் குமார், கணேஷ், தர்ஷன் உட்பட பலருடன் ரஷ்மிகா இணைந்து நடித்துள்ளார்.

ரக்‌ஷித் ஷெட்டி என்பவருடன் ஜோடியாக நடித்தபோது அவருக்கும், ரஷ்மிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர், ரக்‌ஷித் ஷெட்டியை விட்டு நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்ய ரஷ்மிகா முடிவு செய்திருப்பதாக கிசுகிசு வெளியானது. இதற்கிடையே, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்மிகா வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் ரஷ்மிகா வீட்டிற்கு வந்தனர்.

அங்கு அவர்கள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பல கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாயின. விராஜ்பேட்டையில் ரஷ்மிகாவுக்கு ஷெரினிட்டி என்ற பெயரில் இரண்டு மாடி பங்களா உள்ளது. மலைநடுவில் 24 ஏக்கரில் காபி தோட்டம், விட்டல்பாள்யாவில் பெட்ரோல் பங்க் மற்றும் சர்வதேச பள்ளிக்கூடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஷெரினிட்டி என்ற சொகுசு திருமண மண்டபம், விராஜ்பேட்டையில் 5 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: