சென்னை: மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை ஒழுங்கமைக்க குழு அமைக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர் திருநாளான தை பொங்கல் முதல் நாளன்று தமிழகத்தில் மதுரை மாவட்டம், அவனியாபுரம் அதனை தொடர்ந்து பாலமேடு மற்றும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களை பாதுகாக்கக்கோரி மதுரையை சேர்ந்த திருப்பதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வில் முக்கியமான இடம் என்பது ஜல்லிக்கட்டு மாடுகளை பதிவு செய்யும் இடம், மாடுகளை பரிசோதனை செய்யும் இடம் மற்றும் வாடிவாசல் உள்ளிட்டவையாகும். இந்த இடங்களில் உயர்நீதிமன்றம் ஒரு குழு அமைத்து உத்தரவிட வேண்டும். இந்த குழு என்பது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முறையாக வாடிவாசலில் காளைகள் அவிழ்த்துவிடுவதை கண்காணிக்க வேண்டும்.