புதுடெல்லி: ‘பீகார் மாநிலத்தில் அரசு காப்பக சிறுமிகள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை,’ என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அரசு உதவி பெறும் காப்பகத்தில் 29 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, டாடா சமூக அறிவியல் நிறுவனம் நடத்தி ஆய்வில் தெரிய வந்தது. இதில், 11 சிறுமிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, இம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார். அதன்படி, இதை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாக்கூர் உட்பட 21 பேரை கைது செய்தனர்.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் விசாரணையின் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.