புதுக்கோட்டை: கொத்தமங்கலத்தில் ஓட்டல் வியாபாரம் முடிந்து வீட்டுக்குச் சென்ற உரிமையாளரை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் அடுத்த கொத்தமங்கலம் மேற்கு பாரதிநகரை சேர்ந்த முத்தையா மகன் ரமேஷ் (35). இவர் கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதியில் தனது தந்தையின் ஓட்டலை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தை உள்ளது. நேற்றிரவு இரவு 10 மணிக்கு பின்னர் வியாபார பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டலை பூட்டிவிட்டு சுமார் 2 கி. மீ. தூரத்தில் உள்ள தனது வீட்டிற்கு தனியாக பைக்கில் சென்றுகொண்டிருந்தார். வீட்டருகே 500 மீட்டர் தூரத்தில் வந்தபோது அங்கு நின்ற மர்ம கும்பல் சுரேஷை வழிமறித்து சரமாரியாக வெட்டி தள்ளிவிட்டு தப்பிச் சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சுரேஷ் அலறிய சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரண்டு வந்தனர். அப்போது சுரேஷ் இறந்து கிடந்தார்.