சென்னை: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து முன்கூட்டியே தகவல் அளிப்பது சட்டப்படி குற்றம் என அரசு அறிவித்திருந்தும் இன்னும் சில பகுதிகளில் அவை தொடர்ந்து நடைபெற்று தான் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சென்னை வேளச்சேரியில் சட்டவிரோதமாக கருக்கலைப்புக்கு உதவி செய்து வந்த ஸ்கேன் சென்டர் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். வேளச்சேரி, தரமணி சாலையில் இயங்கி வந்த ஸ்கேன் சென்டரில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை முன்கூட்டியே தெரிவித்து கருக்கலைப்புக்கு உதவி செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஒரு கர்ப்பிணி பெண்ணை அனுப்பி புகாரை உறுதிப்படுத்திய காவல்துறையினர் ஸ்கேன் சென்டரின் உரிமையாளர் சிவசங்கரை கைது செய்தனர்.