ஸ்ரீவில்லிபுத்தூர்: துப்புரவு பணியாளராக பணியாற்றிய அதே பஞ்சாயத்தின் தலைவராக பதவியேற்றுக்கொண்ட சரஸ்வதி என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் ஊராட்சியில் அரசு ஊழியராக துப்புரவு பணி செய்து வந்தவர் சரஸ்வதி. இவர், தனது அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் அரசு வேலையை பறிகொடுத்து ஏமாற்றத்தில் இருந்தார். தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த சரஸ்வதி, தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கான்சாபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.