திருப்புவனம்: திருப்புவனம் அருகே முள் படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள்வாக்கு கூறினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் மற்றும் மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை பெண் சாமியார் நாகராணி அம்மையாரும் மாரிமுத்து சுவாமிகளும் நிர்வகித்து வருகின்றனர். நாகராணி அம்மையார் ஆண்டுதோறும் 48 நாள் விரதமிருந்து மார்கழி 18ம் தேதி முள்படுக்கையில் படுத்து தவமிருந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது வழக்கம். 48ம் நாளான நேற்று கோயில் வாசலில் கருவைமுள், உடைமுள், இலந்தைமுள், கத்தாளை முள், சப்பாத்திக்கள்ளி உட்பட பல்வேறு வகையான முட்களால் 6 அடி உயரத்தில் 10 அடி அகலத்திற்கு படுக்கை அமைக்கப்பட்டது.