கான்பூர்: உத்தரப் பிரதேசம் - தமிழ்நாடு அணிகள் மோதும் எலைட் பி பிரிவு லீக் ஆட்டம் உட்பட, நேற்று தொடங்குவதாக இருந்த பல ரஞ்சி கோப்பை லீக் ஆட்டங்கள் மழை காரணமாக பாதிக்கப்பட்டன. நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் 4வது சுற்று லீக் ஆட்டங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கின. உத்தரப் பிரதேசம்-தமிழ்நாடு இடையிலான முதல்நாள் போட்டி கான்பூரில் தொடங்க இருந்தது. ஆனால் அங்கு பெய்த கனமழை காரணாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து கொட்டியதால், டாஸ் கூட போடாமல் முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்தது. அதேபோல் கொல்கத்தாவில் பெங்கால் - குஜராத் இடையிலான போட்டியும், திமாபூரில் நாகாலாந்து - சண்டிகர் இடையிலான போட்டியும் முதல்நாளான நேற்று பிற்பகலுக்கு முன்பே முடிவுக்கு வந்தன. புவனேஸ்வரில் சிக்கிம் - அருணாச்சலப் பிரதேசம் இடையிலான போட்டியும், மங்கல்டயில் மேகலாயா - புதுச்சேரி இடையிலான போட்டியும், அகர்தலாவில் திரிபுரா - ஒடிஷா இடையிலான போட்டியும், ராய்பூரில் சத்தீஸ்கர் - அரியானா இடையிலான போட்டியும் தாமதமாக தொடங்குதாக முதலில் அறிவிக்கப்பட்டது.