அரக்கோணம்: அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டை- மகேந்திரவாடி ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில்வே ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணியளவில், காட்பாடியில் இருந்து அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.