ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே உள்ளாட்சி தேர்தல் மோதலில் திமுக ஆதரவாளர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலும் தந்தை, மகன் உள்ளிட்ட 5 பேருக்கு வெட்டு விழுந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லதா, முப்புலிவெட்டியைச் சேர்ந்த இளையராஜா, அதே பகுதியைச் சேர்ந்த கோசி மணி ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இதில் இளையராஜா தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர். இதையொட்டி அவர்களது ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு பச்சேரி பகுதி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் ஓட்டுப்பதிவில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் லதாவின் கணவர் மாசானசாமி, அவரது சகோதரர் சோமசுந்தரம், சண்முகசுந்தரம் ஆகிய 3 பேருக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.