களக்காடு: அரசு இழப்பீடு தராததால் களக்காடு அருகே சிங்கிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தீ வைத்த பெண், ஜன்னல்களை நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தில் கடந்த 1990ம் ஆண்டு களக்காடு யூனியன் சார்பில் கிராம மருந்தகம் தொடங்கப்பட்டது. பின்னர் 1998ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனை அருகே பாப்பா (60) என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சுகாதார நிலையத்தில் விரிவாக்கப் பணிக்காக டீக்கடையை சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதற்காக இழப்பீடு வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான இழப்பீடு 5 ஆண்டுகளாகியும் பாப்பாவிற்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்து வந்தார். இருப்பினும் இழப்பீடு வழங்கப்படவில்லை.