கொழும்பு: ‘பெரும்பான்மை மக்களின் சம்மதமின்றி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க முடியாது,’’ என்று இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் 37 ஆண்டுகளாக நடந்த போர், கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இதில், புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். 4 மாதங்களாக நடந்த இறுதிக்கட்ட போரில், 40 ஆயிரம் தமிழர்களை, இலங்கை ராணுவம் கொன்றதாக குற்றம்சாட்டப்ட்டது. இந்த போர் குற்றத்துக்கு, ஐநா மனித உரிமை ஆணைய தீர்மானங்கள் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. முன்னாள் அதிபர் சிறிசேனா அரசின் ஆதரவுடன், கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணையம் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில், ‘சர்வதேச விசாரணை அமைப்பை ஏற்படுத்தி இலங்கை ராணுவம் மற்றும் புலிகள் அமைப்பினர் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.