சென்னை: பாஜ, அதிமுக அரசுகளை கண்டித்து, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்தும் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூறியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். இதை ஒடுக்கி விட வேண்டும் என்ற வெறியோடு மத்திய உள்துறை அமைச்சகம், காவல் துறை நிர்வாகத்தை பயன்படுத்தி அதிகார அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த ஜனநாயக விரோதச் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பாஜ, அதிமுக அரசுகளை கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு தலைநகர் சென்னையில் கண்டனப் பேரணி நடத்துகிறது.