சென்னை: ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் சிக்கியவர்களை விடுதலை செய்ய லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சென்னை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதில் பல முக்கிய புள்ளிகள் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பட்டியலை போலீசார் தயார் செய்து, கவுதம் சந்த் நிமானி, மகாவீர் சந்த், பாப்பு, உத்தம் சி.ஜெயின் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இவர்களை சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதாக கூறி தொழிலதிபர்கள், மகேந்திரசிங் ரங்கா, நேமிசந்த், ஹிராகுமார் ஆகிய மூன்று பேர் வழக்கில் சிக்கியவர்களிடம் ₹1 கோடியே 35 லட்சம் வசூல் செய்ததாகவும். அதில் 60 லட்சத்தை, வழக்கை விசாரித்து வந்த கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டான ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு வழங்கியதாகவும் புகார் எழுந்தது. இந்த புகார் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.