இந்தியா வந்துள்ள போர்ச்சுகல் பிரதமர் அண்டோனிடோவுடன் பிரதமர் மோடி சந்திப்பு: உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை

டெல்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள போர்ச்சுகல் பிரதமர் அண்டோனிடோ கோஸ்டா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். முன்னதாக இந்தியாவுக்கு வருமாறு போர்ச்சுகல் பிரதமர் ஆண்டனியோ கோஸ்டாவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இந்த அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசுமுறை பயணமாக போர்ச்சுகல் பிரதமர் அண்டோனிடோ கோஸ்டா இன்று இந்தியா வந்தார்.

இந்தியா வந்துள்ள போர்ச்சுகல் பிரதமரை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, தொழில் நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது இரு நாட்டுக்கு பரஸ்பர ஆர்வம் உள்ள துறைகளில் ஒத்துழைப்பை வழங்குவதற்கு வாய்ப்பாக கருதப்படுகிறது.

இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது; கடந்த மூன்று ஆண்டுகளில், இரு தலைவர்களுக்கு இடையே நடைபெறும் 3-வது சந்திப்பு இதுவாகும். மீண்டும் போர்ச்சுகல் பிரதமராக கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட பின், ஐரோப்பாவிற்கு வெளியே  மேற்கொண்டுள்ள முதல் சுற்றுப்பயணம் இதுவே ஆகும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: