சரவண பவன் ராஜகோபாலுக்கு தண்டனை வாங்கி தந்த ஜீவஜோதி விரைவில் பாஜவில் ஐக்கியம்

சென்னை:  சரவண பவன் ஓட்டலில் மேலாளராக பணியாற்றியவர் ராமசாமி. அவரது மகள் ஜீவஜோதியை ஜோசியர் கூறியதற்காக மூன்றாவதாக திருமணம் செய்ய முயற்சித்தார் ராஜகோபால். ஆனால், ஜீவஜோதியோ தனது காதலர் பிரின்ஸ் சாந்தகுமாரை மணந்து கொண்டார். இதையடுத்து பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானலில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அதற்கு காரணம், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தான் எனக் கூறி ஜீவஜோதி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தினார். இதில் வெற்றி பெற்ற ஜீவஜோதி, ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று கொடுத்தார். இதன் மூலம் தமிழக அளவில் பரீட்சயமான நபராக மாறினார்.

இந்நிலையில் தற்போது மறுமணம் செய்து கொண்டு கணவர் மற்றும் தாயாருடன் தஞ்சையில் உணவகம் நடத்தி வருகிறார்.  மேலும் மகளிர் தையலகம் ஒன்றை நடத்தி வருவதுடன் மணப்பெண்களுக்கான ஆடை டிசைனிங் பணிகளையும் கவனித்து வருகிறார்.  தற்போது, ஜீவஜோதி பாஜவில் சேர இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்த நிலையில் விரைவில் பாஜவில் சேர உள்ளது உறுதியாகியுள்ளது.

பாஜவில் இணையுமாறு கருப்பு முருகானந்தம் அவரை அணுகி பேசியுள்ளார். இதையடுத்து சென்னையில் வானதி சீனிவாசனை சந்தித்து பேசிய ஜீவஜோதி பல்வேறு விவகாரங்கள் பற்றி மனம் விட்டு பேசியுள்ளார். போராட்டக் குணம் மிக்க பெண்கள் பாஜவில் இணைய வேண்டும் என்று வானதி சீனிவாசன் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று பாஜவில் இணைய ஜீவஜோதி முடிவெடுத்துள்ளார். எனவே, விரைவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அல்லது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் ஜீவஜோதி பாஜவில் இணைகிறார்.

Related Stories: