சென்னை, ஏப்.23: பொன்னேரி ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக, எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டு, சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ஆந்திரா வழியே வடமாநிலங்களுக்கு நாள்தோறும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. பொன்னேரி கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று திடீரென்று சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை நோக்கி வந்த ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. சிக்னல் பழுது ஏற்பட்டதால் சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹௌரா நோக்கி செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் என 2 ரயில்கள் அடுத்தடுத்து பொன்னேரி ரயில் நிலையத்தில் ஒன்றன்பின் ஒன்றாக காத்துக் கிடந்தன. ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று சிக்னல் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சுமார் 30 நிமிடங்கள் காலதாமதமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டு சென்றன. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
