புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்முறையாக அனைத்து மகளிர் தபால் நிலையம் உதயமாகியுள்ளது. பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் சூழலில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் அஞ்சலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது தனி கவனத்தை ஈர்த்துள்ளது. அஞ்சல் துறையில் முழுக்க முழுக்க பெண் பணியாளர்களை கொண்டு தபால் நிலையங்களை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டது. இதன் பலனாக கடந்த 2013ம் ஆண்டு டெல்லியில் முதன்முறையாக பெண்கள் தபால் நிலையம் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் அஞ்சல் அலுவலகம் அனைத்து மகளிர் தபால் நிலையமாக உதயமாகியுள்ளது. இந்த அஞ்சலகத்தில் நிலை அதிகாரி, உதவியாளர், உரைகளில் முத்திரை இடுவோர், தபால்க்காரர் என அனைத்து பிரிவுகளிலும் பெண்களே பணியாற்றுகின்றனர்.