புதுடெல்லி: தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, லக்னோவில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது. உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிரசாத் மருத்துவ அறிவியல் கல்லூரியில் போதுமான வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து, கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. தடையை எதிர்த்து பிரசாத் கல்வி அறக்கட்டளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பின்னர், இந்த மனு திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி லக்னோ உயர் நீதிமன்றத்தின் அலகாபாத் கிளையில் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில், மருத்துவ கல்லூரிக்கு ஆதரவாக பணம் பெற்றுக் கொண்டு, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மாணவர் சேர்க்கைக்கு அனுமதித்து உத்தரவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.