திருச்சி: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை கோயிலில் அமைக்கப்பட்ட மெகா கொப்பரையில் 900 லிட்டர் எண்ணெய் ஊற்றும் பணி நேற்று துவங்கியது. 300 மீட்டர் திரி தயாரிப்பு பணி நிறைவு பெற்றது. கார்த்திகை தீப திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் வரும் 10ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி அன்று மாலை மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோயிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன் உள்ள உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செப்பு கொப்பரையில் பருத்தி துணியில் தயாரிக்கப்பட்ட திரி வைக்கப்பட்டு அதில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றி மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியும். இந்த தீபத்திருநாளில் உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.