மதுரை: மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீவிர வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. பிளாட்பார கடைகள் அகற்றப்பட்டன. பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து, மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக்கோரி, மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு உத்தரவு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நான்கு சித்திரை வீதிகளில் தலா 5 போலீசார் வீதம் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாகனங்கள் சித்திரை வீதிகளுக்கு வெளியே நிறுத்தப்படுகின்றன. தீவிர சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மோப்ப நாய் மூலம் கோயிலை சுற்றி தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.