வருசநாடு: மயிலாடும்பாறை அருகே உள்ள முத்தாலம்பாறையில் அரசு ஆரம்பப் பள்ளியின் மேற்கூரை மற்றும் சுவர்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதால் மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். சேதமடைந்த மேற்கூரை மற்றும் சுவர்களை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்த பள்ளியின் மேற்கூரை ஓடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சேதமடைந்த ஓடுகளின் மீது தார்ப்பாய்களை போட்டி மூடினர். தற்போது தார்ப்பாய்களும் கிழிந்து விட்டதால் மழை பெய்யும் போது, வகுப்பறைகளுக்குள் தண்ணீர் கொட்டுகிறது. மழைநீர் இறங்கி பள்ளியின் சுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.