ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி:  ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜம்மு காஷ்மீர் மாநில மாக இருந்தபோது, அதற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால், வதந்திகள் பரவி வன்முறைகள் வெடிக்காமல் இருப்பதற்காக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதள சேவைகளும் முடக்கப்பட்டது. முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், குலாம் நபி ஆசாத் உள்பட பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது; குலாம் நபி ஆசாத் சார்பில் கபில் சிவில் வாதம் செய்தார். அப்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் தேசிய பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் காஷ்மீரில் 70 லட்சம் பேரை அரசால் சிறையில் அடைக்க முடியுமா என வழக்கறிஞர் கபில்சிவில் கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories: