முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால், மின் தடையில்லாத மாநிலமாகத் திகழ்கிறது: தமிழ்நாடு அரசு!!


* 10,779 எம்.வி.ஏ(MVA). நிறுவு திறனுடன் 54 புதிய துணை மின் நிலையங்கள் !

* 33/11 கி.வோ(KV) நிறுவு திறனுடன் 46 புதிய துணை மின் நிலையங்கள் !

* 17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகள் !

* 31,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகள் !

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால், மின் தடையில்லாத மாநிலமாகத் திகழ்கிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்;

* நிறுவப்பட்டு மின்தடையில்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது !
சூரிய, சந்திர, விண்மீன்களுக்கு அடுத்து உலகை ஒளிமயமாக்கும் அற்புத அறிவியில் சக்தி “மின்சாரம்”. தமிழ்நாட்டில் 1933-ஆம் ஆண்டில் முதன்முதல் முகிழ்த்த மின்சாரம் இன்று தமிழ்நாட்டை வளப்படுத்திடும் வலிமைமிக்க சக்தியாகத் திகழ்கிறது. இன்று நூற்றாண்டு நிறைவு விழா காணும் சரித்திர நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் 1974-ஆம் ஆண்டில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார இணைப்புகளை வழங்கி இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லை எனும் சாதனையைப் படைத்தவர்.

1990-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாய பம்ப் செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கி-வேளாண் உற்பத்தி பெருகச் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இன்று, அவர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 2021-இல் ஆட்சிப் பொறுப்பேற்று – திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறார். மின் உற்பத்திக்காகப் புதிய பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். 2021 முதல் மூன்றாண்டுகளில் 2 இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க ஆணையிட்டு வழங்கி வருகிறார்.

* மின் பிரச்சினையை தீர்க்கும் மின்னகம்
முதலமைச்சர் “94987 94987” என்னும் கைபேசி எண் வழியாக, நுகர்வோர் மின்சாரம் தொடர்பாக, தமக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து புகார்களைப் பதிவு செய்திட “மின்னகம்” எனும் மாநில அளவிலான மின் நுகர்வோர் சேவை மையத்தினை 20.6.2021 அன்று தொடங்கி வைத்தார்கள். இந்த மின்னகம் வழியாக மக்கள் இருந்த இடத்திலிருந்தே இதுவரை தெரிவித்த 23 இலட்சத்து 97 ஆயிரத்து 957 புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 99.82 சதவீதப் புகார்கள் மீது தீர்வுகள் காணப்பட்டதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அரசைப் பாராட்டுகின்றனர்.

* மின் நிறுவுதிறன்
ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டில் 32,595 மெகாவாட்டாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மின் நிறுவுதிறன் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் 36,671 மெகாவாட் என அதிகரித்துள்ளது.

* அதிகபட்ச மின் தேவையை நிறைவு செய்த திராவிட மாடல் அரசு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், மின்கட்டமைப்பு, 30.4.2024 அன்று ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 454.32 மில்லியன் யூனிட் மின்சாரத்தையும், 2.5.2024 அன்று 20,830 மெகாவாட் உச்ச மின் தேவையையும் எவ்விதத் தடங்கலுமின்றி வழங்கி சாதனை படைத்துள்ளது திராவிட மாடல் அரசு.

* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
10.9.2023 அன்று காற்றாலை மூலம் பெறப்பட்ட அதிகபட்ச மின் உற்பத்தி 120.25 மில்லியன் யூனிட்டுகளும் 23.4.2024 அன்று சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச மின் உற்பத்தி 40.50 மில்லியன் யூனிட்டுகளும் தமிழ்நாடு மின்சாரத் தேவைகளை ஈடுசெய்வதில் பெரிதும் துணைபுரிந்துள்ளன. இந்த அரசு பதவியேற்ற நாளில் இருந்து 3,984 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள், தமிழ்நாடு மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டு சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களின் மொத்த நிறுவு திறன் 8,496 மெகாவாட்டாக உயர்ந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது.

2021 – 2022 ஆம் ஆண்டில் கட்டடங்களின் கூரைகள் மேல் நிறுவப்பட்ட சூரிய மின் சக்தி திறனுக்காக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சம் (MNRE) ரூ.7.9 கோடி ஊக்கத் தொகை வழங்கித் தமிழ்நாட்டைப் பாராட்டியுள்ளது. தருமபுரியில் 12 மெகாவாட், எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 15 மெகாவாட் இணை மின் திட்டங்கள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தனியாருக்குச் சொந்தமான பழைய திறனற்ற 16.8 மெகாவாட் காற்றாலைகளை மீண்டும் வலுப்படுத்திடும் முயற்சியில் திராவிட மாடல் அரசு ஊக்கம் தந்துள்ளது.

* மின் உற்பத்தி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதில் ஆர்வம் கொண்டு செயல்படுத்தும் முனைப்பான திட்டங்களால் மின் வாரியத்திற்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களின் மூலம் 2020-21-ல், உற்பத்தி செய்யப்பட்ட 15,554 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம், 2021-22ஆம் ஆண்டில் 20,391 மில்லியன் யூனிட்டுகளாக இது 31.1 சதவீதம் ஆகும். இது 2022-23 ஆம் ஆண்டில் 22,689 மில்லியன் யூனிட்டுகளாக – 11.27 சதவீதம் அதிகரித்தது.

மேலும், 2023-24 ஆம் ஆண்டில் 25,479 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது 12.3 சதவீதமும் அதிகரித்து தொடர்ந்து சாதனைகள் படைக்கப் பட்டுள்ளன. அதேபோல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் புனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி 2021-22 & 2022-23 ஆம் ஆண்டுகளில் ஒன்றிய மின் ஆணையம் நிர்ணயித்த இலக்கை விட 1,660.36 மற்றும் 2,261.08 மில்லியன் யூனிட்கள் முறையே கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டும் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

* மின் உற்பத்தி திட்டங்கள்
தமிழகத்தின் சொந்த நிறுவுதிறனை அதிகரிக்கும் பொருட்டு, நான்கு புதிய திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனல் மின்நிலையங்களுக்குத் தேவைப்படும் அதிக அளவு நிலக்கரியைக் குறுகிய காலத்தில் கையாள்வதற்காக, தூத்துக்குடி துறைமுகம் தளம்-1-ல் அதிக கொள்ளளவு கொண்ட புதிய இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களை தமிழ்நாடு முதலமைச்சர் 31.1.2023 அன்று தொடங்கி வைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்தார்கள்.

முதலமைச்சர் வட சென்னை அனல் மின் நிலையம் -III திட்டத்தை 7.3.2024 அன்று தொடங்கிவைத்ததைத் தொடர்ந்து அந்நிலையம் 425 மெகாவாட் அளவிற்கு உற்பத்தித் திறன் அடைந்து, 70.5 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. வட சென்னை அனல் மின் நிலையம் -I ல் இருந்து கரி துகள்கள் வட சென்னை அனல் மின் திட்டம் -III -ஐ பாதிக்காமல் இருப்பதற்காக, ரூ.38 கோடி செலவில் தூசித் திரை (Dust Screen) 2023 ஜனவரியில் அமைக்கப்பட்டுள்ளது.

* மின் தொடரமைப்பு
2021 ஆம் ஆண்டு முதல் 54 புதிய துணை மின் நிலையங்கள் 10,779 எம்.வி.ஏ. நிறுவு திறனுடன் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதுள்ள துணை மின் நிலையங்களில் 378 கூடுதல் மின் மாற்றிகள் / தரம் உயர்த்தப்பட்டு, கூடுதல் 6,373 எம்.வி.ஏ. திறனுடன் நிறுவப்பட்டுள்ளன. 3,086.53 சுற்று கி.மீ., மிக உயர் அழுத்த மின் பாதைகள் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
தரமான மின்சார விநியோகத்திற்காக, 9 முக்கிய துணை மின் நிலையங்களில் 1,840 மெகாவோல்ட் ஆம்பியர் திறன் கொண்ட ரியாக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.

* புதிய மின் கோட்டங்களும், மண்டலங்களும்
தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் கரூர் ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு மூன்று புதிய மின்மண்டலங்களும், சேப்பாக்கம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தேன்கனிக்கோட்டை, பென்னாகரம், திருவெண்ணெய்நல்லூர், ஊத்துக்குளி, வேடசந்தூர், ஜெயங்கொண்டம், சாத்தூர், கெங்கவல்லி என 11 புதிய கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 29.8.2021 முதல் அதிக மின்பளுவுள்ள பகுதிகள் மற்றும் குறைந்த மின்னழுத்தம் நிலவிய பகுதிகளில் தடையின்றிச் சீரான மின்சாரம் வழங்குவதற்காக இதுவரை மொத்தம் 11,038 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டன.

டெல்டா மாவட்டங்களின் கடலோரம் அமைந்துள்ள துணை மின் நிலையங்களுக்கு இடையே செல்லும் 33 கே.வி. மேனிலை உயரழுத்த மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. சுசீந்திரம், திருவரங்கம் திருக்கோயில்களின் தேரோடும் வீதிகளில் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் புதைவட மின்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள் 46 நிறுவப்பட்டுள்ளன. 17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகளும் 31,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகளும் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

* மிக்ஜாம் புயலுக்குப் பின்
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் 11,164 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உதவியுடன் 24 மணி நேரமும் இடைவேளையின்றி போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குறுகிய காலத்தில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.

* தென் மாவட்டங்களில் அதீத கன மழைக்குப் பின்
தென் மாவட்டங்களில் 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய நாட்களில் பெய்த வரலாறு காணாத அதீத கன மழையால் ஏற்பட்ட சேதங்களை, 5,920 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உதவியுடன் 24 மணி நேரமும் இடைவேளையின்றி போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குறுகிய காலத்தில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது.

சென்னையில், மழைக்காலங்களின் போது மழை நீர் தேங்கும் இடங்களில் உள்ள மின் தூண் பெட்டிகள் (Pillar Box) கண்டறியப்பட்டு, 5,086 மின்தூண் பெட்டிகள் தரை மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. மழைக் காலங்களின் போதும் சீரான மின்சாரம் வழங்குவதற்காக, துணை மின் நிலையங்களில் உள்ள 41 திறன் மின் மாற்றிகளின் அடித்தளம் 1 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டன.

* தகவல் தொழில்நுட்பத் துறையின் மேம்பாட்டுப் பணிகள்:
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. புதிய விவசாய மின் இணைப்பு, கட்டண மாற்றம், பெயர் மாற்றம், சோலாரை சோலார் அல்லாததாக மாற்றுதல் மற்றும் மின் ரசீது பதிவிறக்கம் போன்ற அனைத்துத் தாழ்வழுத்தச் சேவைகளுக்கான வசதி ஆன்லைன் விண்ணப்ப போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து கள சொத்துக்களின் விவரங்கள் டிஜிட்டல் மயமாக்கபட்டுள்ளது. (ஜியோடேக்கிங்) இப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்தியாவின் முதல் டிஸ்காம் என்ற பெருமை தமிழ்நாடு மின்வாரியத்திற்குக் கிடைத்துள்ளது. புவியியல் தகவல் முறைமையை வாரிய பொறியாளர்களை பயன்படுத்தி செயல்படுத்தியதன் விளைவாக ரூ. 200 கோடி செலவு சேமிப்பு ஏற்பட்டுள்ளது.

* திராவிட மாடல் ஆட்சியில் மின்துறை பெற்றுள்ள விருதுகள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிறுவன வள திட்டமிடல் (ERP) செயல்படுத்தியதற்கு 2022 ல் – SKOTCH தங்க விருது. தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி மின் அளவிகளை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களில் பொருத்தியதற்கான வெள்ளி SKOTCH விருது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இந்திய ஸ்மார்ட் கிரிட் ஃபோரம் இன்னோவேஷன் விருது 2023 (Indian Smart Grid Forum Innovation Award 2023) இல் பங்கேற்று புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களில் தானியங்கி மின் அளவிகள் பொருத்தி செயல்படுத்தியமைக்கான வைர விருது

* “இந்தியன் எக்ஸ்பிரஸ்” குழுமத்தின் எக்ஸ்பிரஸ் கம்ப்யூட்டர் ஐடி எக்ஸலன்ஸ் விருது
ஜிஐஎஸ் அமலாக்கத்திற்காக ஸ்கோச் “ஆர்டர் ஆஃப் மெரிட்” விருது ஆகிய விருதுகளைப் பெற்றுத் தமிழ்நாடு மின்துறை புகழ் ஈட்டியுள்ளது. பாரதீப் துறைமுகத்தில் 2021-22, 2022-23 ஆண்டுகளில் அதிக அளவில் நிலக்கரியைக் கையாண்டதற்காக பாரதீப்

* துறைமுகம் வழங்கிய “சிறந்த ஏற்றுமதியாளர் விருது
“இந்திய விண்ட் எனர்ஜி ஃபோரம் லீடர்ஷிப் விருதுகள் 2023” (India Wind Energy Forum Leadership Awards 2023) என்ற அமைப்பில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்களுக்கான (RE Generators) தானியங்கி மின் அளவிகளை (AMR) பொருத்தியதற்கான “இந்த ஆண்டின் மிகவும் முற்போக்கான நிலை” என்ற வணிகச் சிறப்பு விருது 2022-23-ம் ஆண்டில் 8.02 மில்லியன் மெட்ரிக்டன் நிலக்கரியினை எண்ணூர் / காமராஜர் துறைமுகத்தில் கையாண்டதன் பொருட்டு

* “சிறந்த வணிக கூட்டாளர் விருதும்”
27.12.2023 அன்று கப்பலிலிருந்து ஒரே நாளில் 61,940 மெட்ரிக்டன் நிலக்கரியினை இறக்கிச் சாதனை படைத்ததற்காக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கான “சாதனை விருதும்“ காமராஜர் துறைமுகத்தால் வழங்கப்பட்டன. முதலமைச்சர் சீரிய வழிகாட்டுதலின்படி சிறப்பான பல விருதுகளை பெற்றுச் சாதனைகள் பல படைத்துள்ளது

* தமிழ்நாடு அரசின் மின்துறை சேமிப்பு
2021-22 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் திறமையான செயல்பாடு, வட்டி விகிதம் குறைப்பு, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.2,745 கோடியும் 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ 1,090 கோடி சேமிப்பும் ஏற்பட்டுள்ளது.

* சலுகைகளால் 2.36 கோடி வீட்டு உபயோக மின்நுகர்வோர் பயன்
10.9.2022 முதல் திருத்தப்பட்ட மின்கட்டணத்தில், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு நிலைக் கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20/- முதல் ரூ.50/- வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டு, நுகர்வோர்களிடம் இருந்து மின் பயன்பாட்டுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள 2.36 கோடி வீட்டு மின் நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

* கைத்தறி நெசவாளர்கள் பயன்
கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் மட்டுமே இலவசம் என்ற நிலை மாற்றியமைக்கப்பட்டு இரு மாதங்களுக்கு 300 யூனிட்டுகள் இலவசம் என உயர்த்தி வழங்கியது இந்த அரசு. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 73,642 கைத்தறி நெசவாளர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

* விசைத்தறி நெசவாளர்கள் பயன்
விசைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 750 யூனிட்டுகள் இலவசம் என்ற நிலை மாற்றப்பட்டு இரு மாதங்களுக்கு 1,000 யூனிட்டுகள் இலவசம் என உயர்த்தப்பட்டது. மேலும், மின் கட்டண உயர்வில் 35 காசுகள்/ யூனிட் இரு மாதங்களுக்கு 1,001 யூனிட் முதல் 1,500 யூனிட் வரை மற்றும் 70 காசுகள் / யூனிட் இரு மாதங்களுக்கு 1,500 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள மின் நுகர்வுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள 1,68,000 விசைத்தறி நுகர்வோர்கள் இந்த அரசை மனதார பாராட்டி வருகின்றனர்.

ஆரம்பத்தில் தாழ்வழுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு உச்ச நேர மின் நுகர்விற்கான கட்டணமானது (ToD Charges) 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக 08.11.2022 முதல் குறைக்கப்பட்டு, பின்னர் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத்தின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கூடுதல் சலுகையாக ஸ்மார்ட் மீட்டர் (Smart meter) பொருத்தப்படும் வரை உச்ச நேர நுகர்வுக்கான மின் கட்டணம் வசூலிக்கப்படாது என 10.11.2023 முதல் அறிவித்தது. இந்தக் குறைக்கப்பட்ட கட்டணங்களைத் தமிழ்நாடு அரசு மானியமாக வழங்குகிறது. இதனால் சுமார் 3.11 லட்சம் தாழ்வழுத்தத் தொழிற்சாலை நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

* 3.30 கோடி நுகர்வோர் பயன்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண ஆணைக்கு ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 23 வரையிலான நுகர்வோர் விலைக் குறியீட்டுக்குப் பதிலாக ஆகஸ்ட் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான நுகர்வோர் விலைக் குறியீட்டைக் கருத்தில் கொள்ளுமாறு, கொள்கை உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் மின் கட்டண உயர்வு 4.7 சதவீதத்திலிருந்து 2.18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

எனவே, இந்தக் குறைக்கப்பட்ட மின் கட்டணத்தினால் அனைத்து 3.30 கோடி நுகர்வோர்களும் 1.7.2023 முதல் பயனடைந்து வருகின்றனர். 2.36 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு, 1.7.2023 முதல் 2.18 சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் ஏற்படும் நிதிச்சுமையை மக்களிடம் சுமத்தாமல் திராவிட மாடல் அரசே ஏற்று மக்களைக் காத்துள்ளது.

* சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் சலுகை
அரசு சிலவகை, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, கட்டணச் சலுகையாக தாழ்வழுத்த வீதப்பட்டி ID யின் கீழ் உள்ள பொதுவான வசதிகளுக்கான கட்டணத்தை யூனிட் ஒன்றிக்கு ரூ.8.15 லிருந்து ரூ.5.50 ஆக குறைத்து ரூ.2.65-ஐ மானியமாக வழங்குகிறது. இதற்காக புதிதாக தாழ்வழுத்த வீதப்பட்டி IE அறிமுகப்படுத்தி 1.11.2023 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வீதப்படி மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது விநியோகம் அதாவது 10 குடியிருப்பாளர்களுக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ மற்றும் பொதுவான விளக்குகள் மற்றும் நீர் விநியோகத்திற்காக மூன்று தளங்களுக்குக் குறைவாகவோ அல்லது சமமாகவோ உள்ள சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொருந்தும்.

* 3.11இலட்சம் தொழில் நிறுவனங்கள் பயன்
LT III B ன் கீழ் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் 10.11.2023 முதல், சூரிய ஒளி மேற்கூரை மின் உற்பத்திக்கான வலையமைப்பு கட்டணத்தினை 50 சதவீதம் (Solar Roof top Network Charges) குறைத்துள்ளது. இந்த 50 சதவீதம் குறைக்கப்பட்ட வலையமைப்பு கட்டணத்தினால் தமிழ்நாட்டில் உள்ள 3.11 இலட்சம் தொழில் நிறுவனங்கள் பயன் பெறுகின்றன.

* நூலகங்களுக்குச் சலுகைகள்
பொதுமக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின் கட்டணத்தினை மானியம் இல்லா வீட்டு விகிதப்பட்டியலில் கணக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 30 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இயங்கிவரும் பல நூலகங்கள் பயனடைந்துள்ளன.

இப்படி, மூன்றாண்டுகளாக மின் தடையே இல்லை எனும் வரலாறு படைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சீர்திருத்தங்களால் புதியதாக துணை மின் நிலையங்களை நிறுவி, மின் மாற்றிகளை அமைத்து, மின்விநியோக அமைப்புகள் சீராகச் செயல்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இந்த அரசைப் பாராட்டுகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால், மின் தடையில்லாத மாநிலமாகத் திகழ்கிறது: தமிழ்நாடு அரசு!! appeared first on Dinakaran.

Related Stories: