சென்னை: மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி பேசுகையில், ரயில்களில் உணவுக்கூடங்கள், கழிப்பறைகளின் பராமரிப்புப் பணிகளை கைவிட ரயில்வேத்துறை தீர்மானித்து இருக்கின்றதா. ரயில்பெட்டிகளில் தூய்மை, கழிப்பறைகளின் பராமரிப்பு குறித்து எத்தனை பேர் குறைகளை தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடரிப் பெட்டிகளை தூய்மையாகப் பராமரிப்பதற்காக, மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்படுகின்றனவா? என்று கேள்வி எழுப்பினார். மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியுஷ் கோயல்: ரயில்களில் உணவுக்கூடங்கள், கழிப்பறைகளின் பராமரிப்பு பணிகளை கைவிட ரயில்வேத்துறை தீர்மானிக்கவில்லை. எடுத்துக்காட்டாக, ராஜ்தானி, சதாப்தி போன்ற முதன்மையான நெடுந்தொலைவு ஓடுகின்ற 1,090 விரைவுத் தொடரிகளில் இருமுனை வழிகளிலும் தூய்மைப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.