லாகூர்: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்பட்டார. பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரீப்புக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டதால் லண்டனுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை உருவானது. இதற்காக ஜாமீன் கிடைத்தாலும், வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்படாதாதால், சிகிச்சைக்காக லண்டன் செல்ல முடியாமல் போனது. இதையடுத்து நிபந்தனையுடன் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, நவாஸ் ஷெரிப் லண்டன் அழைத்துச் செல்லப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அக்டோபர் 22 ஆம் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக ஷெரீப், லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டனில் உள்ள சார்லஸ் டவுன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரீப் அனுமதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல்நலக் குறைவு காரணமாக சுமார் 8 வாரங்களுக்கு நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.