புதுடெல்லி: ‘முத்தலாக் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் சட்ட வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம் கணவர்கள் தங்கள் மனைவிக்கு மூன்று முறை ‘தலாக்’ கூறி உடனடியாக விவாகரத்து செய்கிறார்கள். மனைவியிடம் நேரிலோ, எழுத்துபூர்வமாகவோ, வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவோ இப்படி விவாகரத்து செய்வது நடைமுறையில் இருந்து வந்தது. இது சட்ட விரோதமாகவும், கிரிமினல் குற்றமாகவும் கருதப்படும் என்பதை வலியுறுத்தும் மசோதா கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, முத்தலாக் கூறும் கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.