திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கிளிகொல்லூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவரது மகள் பாத்திமா லத்தீப்(18). இவர் சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி அவர் விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாத்திமா லத்தீபின் தந்தை அப்துல் லத்தீப் நேற்று கொல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: எனது மகள் தற்கொலை செய்த விவரத்தை அறிந்த உடன் நான், கொல்லம் மேயர் ராஜன்பாபு உட்பட சிலர் சென்னை சென்றோம். மருத்துவமனையில் ஆஸ்டல் வார்டன் தவிர ஆசிரியர்களோ மாணவர்களோ யாரும் வரவில்லை. எனது மகளுடன் படித்த மாணவர்களும் ஆசிரியர்களும் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பயந்து எந்த விபரத்தையும் கூற மறுத்தனர். பாத்திமாவின் செல்போனை போலீசார் எடுத்து வைத்துக் கொண்டனர். நாங்கள் கட்டாயப்படுத்திய பின்னரே சிறிது நேரம் செல்போனை எங்களிடம் தந்தனர். அதில் பார்த்தபோது ஆசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் தனது சாவுக்கு காரணம் என்று என் மகள் குறிப்பிட்டிருந்தார். அவர் எனது மகளை மனரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளார். எனவே சுதர்சன் பத்மநாபனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.