தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி-யை நியமித்தது தமிழக அரசு!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி பி.வி.கீதா என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் வாக்கு எண்ணிக்கை தற்போது வரை நடைபெறாமல் வழக்கு நிலுவையில் உள்ளது.  இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நடிகர் சங்கத் தேர்தலையும் தேர்தல் தொடர்பான அறிவிப்பையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது. இந்த விசாரணை நாளை நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த சிலர் தென்னிந்திய நடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை எனவும், மேலும் நடிகர் சங்கத்திற்காக நடைபெறும் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, இது தொடர்பாக தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் எனக் கூறி பதிவுத்துறைக்கு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதனடிப்படையில், இந்த வழக்கு விசாரணையின் போது, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாங்கள் ஏன் ஒரு சிறப்பு அதிகாரியை நியமனம் செய்யக்கூடாது என நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தலைவர் நாசருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. மேலும், சிறப்பு அதிகாரியை நியமனம் செய்யபோவதாக தகவல்களும் வெளியானது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை நடிகர் சங்கத்தை நிர்வகிப்பதற்காக கீதா என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமிப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடக நடிகர் சங்கம் எதிர்ப்பு:

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு நாடக நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை ஐஜி பி.வி.கீதா பதவி ஏற்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடக நடிகர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: