சென்னை: எல்ஐசி பிரீமியத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 1956ம் ஆண்டில் ₹ 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டு இன்றைக்கு ₹30 லட்சம் கோடி முதலீடு உள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது. தேசியமயமாக்கப்பட்ட போது மொத்த ஆயுள் நிதி ₹ 440 கோடியிலிருந்து ₹ 31 லட்சத்து 11 ஆயிரம் கோடியாக வளர்ந்துள்ளது. அதேபோல, 55 லட்சமாக இருந்த பாலிசிதாரர்களின் எண்ணிக்கை இன்று 30 கோடியாக உயர்ந்துள்ளது.இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பொதுமக்களால் நம்பிக்கையோடு செய்யப்படுகிற முதலீடுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி செய்து வருகின்றன. இந்திய மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்மந்தப்பட்ட, இந்தியாவின் வளர்ச்சியில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்ட இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் கடுமையான சோதனைக்கு உள்ளாகி வருகிறது.