கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது வீட்டில் நேற்று முன்தினம் காளி பூஜை செய்தார். இதில் ஆளுநர் கலந்து கொண்டார். இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், ஒடிசா, திரிபுரா போன்ற மாநிலங்களில் காளி பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. வங்க நாட்காட்டியில் கார்த்திகை மாதம் (தமிழ் நாள்காட்டியில் ஐப்பசி) அமாவாசை தினத்தில் காளிபூஜை கொண்டாடப்படும். இதன்படி, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வீட்டில் நேற்று முன்தினம் இரவு காளி பூஜை நடந்தது. மம்தா பானர்ஜி மற்றும் அவரது நெருங்கிய உறவினரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியுமான அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இந்த பூஜையை நடத்தினர். இந்த பூஜைக்காக மம்தா நாள் முழுவதும் விரதம் இருந்தார். பூஜையில் பங்கேற்க மம்தா அழைப்பை ஏற்று மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தான்கர் தனது மனைவியுடன் வந்திருந்தார். அவரை மம்தா வரவேற்றார். திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் பூஜையில் கலந்து கொண்டனர் பூஜை முடிந்த பிறகு மம்தா, அபிஷேக் பானர்ஜி மற்றும் சில திரிணாமுல் கட்சி தலைவர்களுடனும் ஆளுநர் உரையாடினார்.