சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 29 வரும் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் பதவியேற்கிறார்கள். தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 21ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 1,13,766 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,842 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார்.
அதேபோன்று, நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 61,932 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார். இரண்டு அதிமுக வேட்பாளர்களுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் நேற்று முன்தினம் வழங்கினர். இதன்மூலம் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 125ஆக உயர்ந்துள்ளது. திமுகவின் பலம் 100ஆகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 7ஆகவும் உள்ளது.